இலங்கையில் விவாகரத்து சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, 'தவறு இல்லாத விவாகரத்து' என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தவறு இல்லாத விவாகரத்து’ சட்டமூலம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீண்ட விசாரணையின்றி விவாகரத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதற்கு புதிய சட்டமூலம் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய பரஸ்பர அங்கீகாரம், பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டுத் தீர்ப்புகளை அமுல்படுத்துதல் சட்ட மூலம், விவாகரத்து வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளை இலங்கை நீதிமன்றங்கள் அங்கீகரிக்க அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நிறைவேற்றப்பட்ட சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலத்தில் மின்னஞ்சல் (Email), வாட்ஸ்அப் (Whatsapp) போன்ற மின்னணு வழிமுறைகள் மூலமாக அறிவிப்பதற்கான விதிமுறைகள் இதனுள் அடங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து வழக்குகளில் ஏனைய தரப்பினர் வேறொரு நாட்டுக்கு குடிபெயர்ந்தபோது, பதில் அளித்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் இருப்பது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளமையை சீர்செய்ய வேண்டிய தேவை இதனூடாக எழுந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.