இஸ்ஸத் ஜஹான்
காய்த்த மரத்திற்கு கல்லெறியும் பொல்லெறியும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் காய்த்த மரத்திற்கு தீயிட்ட கல்நெஞ்சக் கொடூரிகள் இன்னும் இறக்காமம் பிரதேசத்தில்.
இறக்காமம் பிரதேசத்தில் ஜபல் கிராமத்திலுள்ள மா, தென்னை அடங்கிய தோட்டமொன்று கல்நெஞ்சங் கொண்ட கயவர்களால் எரிக்கப்பட்டுள்ளது. தோட்ட உரிமையாளர் சம்மாந்துறையில் வசித்து வந்தபொழுதிலும் வாரத்திற்கு ஓரிரு முறை வருகை தந்து தனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி வளர்த்து வந்தார்.
இன்று காலையும் (2024.07.23) தோட்டத்திற்கு நீரூற்றச் சென்றபோது இக் கோர நிகழ்வைக்கண்டு கதிகலங்கியதாக எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, தனது தோட்டத்திற்கு அருகாமையில் இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அடிக்கடி காலையில் வரும் போது மதுக் குப்பிகள், மற்றும் போதைப் பொருள் கழிவுகளை அவதானிப்பதாகவும் 67 வயது நிரம்பிய இத்தோட்டத்தின் உரிமையாளர் கவலையோடு தெரிவித்தார்.
இப்படியான அழிப்புகள், சேதங்கள் தொடர்பாக அவதானித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது யாரின் பொறுப்பு? இவர் சிந்திய வியர்வைத் துளிகளுக்கு விமோசனம் வழங்குவது யார்?
என்பதுதான் இங்கே பெரும் கேள்விக்குறிகளாக உள்ள விடயம்.