தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பேருந்து கட்டணத்தில் மட்டுமே தலையிட முடியும் எனவும், ஆனால் பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“முச்சக்கர வண்டிகள் சிறந்த பொதுச் சேவையைச் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
எனினும் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஆனால் அதற்கு தேவையான அதிகாரங்கள் இல்லாததால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் முழுமையாக திருத்தம் செய்துள்ளேன்...
தற்போதைய நிலைமையை மாற்ற, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சட்டமூலம் அனுப்பப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
“அதாவது, தற்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பேருந்து கட்டணத்தில் மட்டுமே தலையிட முடியும்.
பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கான விதிமுறைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அனுமதியும் கிடைத்துள்ளது.
இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.
இதன் மூலம் மீட்டர் பொருத்துதல், பற்றுச்சீட்டு கோரினால் அதனை வழங்குதல் போன்றவற்றை உரிய முறையில் செயல்படுத்த முடியும்" என்றார்.