இஸ்ரேலிய - ஜோர்தானிய உறவுகள்

 


சர்வதேச ஆய்வாளர் கலாநிதி.றவூப் ஸெய்ன்


ஜோர்டான் மத்திய கிழக்கில் இஸ்ரேலை எல்லையாகக் கொண்ட முஸ்லிம் நாடு. பலஸ்தீனின் கிழக்கு எல்லையாக சாக்கடலும் ஜோர்தானும் அமைந்துள்ளன. ஹாஷிமிய்ய வம்ச ஆட்சி நீடிக்கும் இங்கே சுமார் ஒரு கோடியே 13 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். எகிப்துக்கு அடுத்ததாக இஸ்ரேலுடன் தனது உறவுகளை சுமூகமாக்கிய (Normalisation) நாடு ஜோர்தான். 1994 ஒக்டோபர் 26 இல் இஸ்ரேலுடன் அது சமாதான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது. அந்த உடன்படிக்கை Wadi Arab Treaty என அழைக்கப்படுகிறது.இது தென் லெபனானிலுள்ள Araba நகரில் கைச்சாத்தானதால் அந்தப்பெயரில் வழங்கப்படுகின்றது.


1980 களிலேயே மன்னர் ஹுஸைன் இஸ்ரேலுடன் சுமூகமான தொடர்புகளைப் பேணத்தொடங்கினார். எனினும் அவ்வுறவு மிக இரகசியமாகவே இருந்துவந்தது. 1948 போரின்போது ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்ட மேற்குக் கரை தொடர்பில் முன்னாள் இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் ஷிமோன் பெறஸ் மற்றும் மன்னர் ஹுஸைனுக்கிடையில் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்தன.மேற்குக்கரையை நிரந்தரமாக ஜோர்தானுக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டபோதும் இஸ்ரேலியப் பிரதமர் இற்சாக ராபின் அதை ஆட்சேபித்தததால் ஜோர்தான் தனது கோரிக்கையை கைவிட்டது.


மீளவும் 1994 இல் இஸ்ரேலுடன் ஜோர்தான் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அதற்கு மத்தியஸ்தம் வகித்தார். அறபுத்தலைவர்களை இஸ்ரேலின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வைப்பதும் ஒரு அநீதியான

 தீர்வுத்திட்டத்தை அறபு நாடுகள் ஏற்றுக்கொள்ளச்செய்வதுமே அமெரிக்க மத்தியஸ்தத்தின் நோக்கம். இங்கும் அதுவே நடந்தது. அதற்கு சில பிச்சைகளையும் வொஷங்க்டன் போட்டுக் கொள்ளும். அவர்களுக்கு டொலரை பிரின்ட் பண்ணுவது மட்டும்தானே செலவு.


அமெரிக்காவுக்கான ஜோர்தானிய கடனுக்கு சலுகை வழங்கப்படும். அது திருப்பிக்கேட்கப்படமாட்டாது என்று கிளிங்க்டன் ஹூஸைனுக்கு ஆசை காட்டினார். ஹூஸைன் இஸ்ரேலுடன் தனது பகைமையை மறந்து உறவுகளைச்சுமூகமாக்க( Normalisation) மனமுவந்து முன்வந்தார். எகிப்தின் முபாரக்கும் ஹுஸைனைத்தூண்டினார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என அவர் எண்ணியிருப்பார். இஸ்ரேலுடன் உறவுகொண்டதால் எகிப்துக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த இன்பங்களை இனி ஜோர்தானும் அனுபவிக்கலாம் என்பதுதான் இதன் பொருள்..


1994. 07.25 இல் ராபின் கிளிங்கன் ஹுஸைன் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தகளை நடாத்தினார். 1994 ஒக்டோபர் 24 இல் Washington declaration இல் ஹுஸைன் ஒப்பமிட்டார்.அதன்படி இதற்குமேல் இஸ்ரேலை ஜோர்தான் பகைத்துக் கொள்ளாது. இருநாடுகளும் இணைந்து பாதுகாப்பு வணிகம் ராஜதந்திரம் என்பவற்றைக்கட்டியெழுப்பும் என்றெல்லாம் உடன்பாடு காணப்பட்டது. இவை அனைத்தும் ஒரு சட்டவிரோத தேசத்தை ஏற்றுக் கொள்வதாகவும் அதன் பாலஸ்தீன மக்கள் மீதான கொடுமைகளையும் ஏற்றுக்கொள்வதாகவுமே இருந்தது. 6 மில்லியன் பலஸ்தீன அகதிகள் குறித்தோ இருநாட்டுத்தீர்வு குறித்தோ ஒரு வார்த்தையும் அங்கு பேசப்படவில்லை.


ஜோர்தான் அமெரிக்காவிடம் இருந்து கடன் வாங்கி தனது மன்னராட்சியைத் தொடரும் வழியாக மட்டுமே இஸ்ரேலுடனான உறவுகளை சுமூகமாக்கியது. இஸ்ரேலுக்கு தனது நிலத்தையும் நீரையும் விட்டுக்கொடுத்தது.யர்மூக் நதியின் 25 விழுக்காட்டு நீரை இஸ்ரேலுக்குத்தாரை வார்த்தது.இன்று இஸ்ரேலிய தூதரகம் அம்மானிலும் ஜோர்தான் தூதரகம் டெல் அவிவிலும் உள்ளன. காஸாவில் இஸ்ரேல் இழைத்து வரும் மனிதப் படுகொலைகள். பலாத்காரங்கள்.இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில்  மன்னர் அப்துல்லாஹ் வாய்வீரம் பேசிக் கொண்டு அறபுலகத்திற்கு படம் காட்டிக் கொண்டிருக்கிறார். வகைதொகையற்ற அதிகாரத்தை தன்வசம் கொண்டுள்ள மன்னர் இரண்டாவது அப்துல்லாஹ் அம்மானின் மக்கள் கொதித்தெழுந்த போது இஸ்ரேலிய தூதரகத்தைப்பாதுகாக்க படாத பாடு படுகிறார்.


மத்திய கிழக்கில் இஸ்ரேல் உருவாவதற்கான காரணகர்த்தாக்களில் ஜோர்தானும் ஒன்று என்றிருக்க அது எப்படி இஸ்ரேலைப்பகைக்கும்? இஸ்ரேலை பாலூட்டி வளர்த்துப் போஷிக்கும் கிழட்டு மன்னராட்சி யில் ஜோர்தான் ஒரு முன்னோடி நாடாகவே இருந்து வருகின்றது.2012 இல் மன்னராட்சிக்கு எதிராக எழுந்த மக்கள் கிளர்ச்சியை யும் அது மிக கோரமாக அடக்கி ஒடுக்கியது!

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section